அரும்புகள் மலரட்டும்: போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்

Friday 11 December 2015

போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்

வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைக்க கடுமையாக போராடியுள்ளார் திருச்சி சிவா.

அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு இந்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தினார். அப்போது பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அப்பாஸ் நக்வி, இதுதொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்றார். அரசு பரிசீலிக்கும் என்பதுடன் நிறுத்திவிடக் கூடாது. உடனடியாக இதுதொடர்பாக முடிவு எடுத்து தேர்வு ஒத்திவைப்பு குறித்து அறிவிக்க வேண்டும் என்று அப்பாஸ் நக்வியை தனிப்பட்ட முறையில் சந்தித்து திருச்சி சிவா வலியுறுத்தினார். அதற்கு அவர், பிரதமரிடம் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், இதனால் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை சந்திக்க தமிழக இளைஞர்களுக்கு உள்ள சிரமம் உள்ளிட்டவற்றை விரிவாக ஒரு கடிதம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்திருந்தார் திருச்சி சிவா. இதனைத் தொடர்ந்து இந்த தேர்வு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் நேரில் சந்தித்த சிவா, தமிழக இளைஞர்களின் நிலைமையை விரிவாக எடுத்துரைத்தார்.

அதற்கு அவர், மத்திய தேர்வாணையத் தலைவரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக மத்திய தேர்வாணையத் தலைவரை சந்தித்த சிவா, அவரிடமும் நிலைமையை எடுத்துரைத்தார். ஆனால் அவர், இரண்டு, மூன்று மாவட்டங்களில் மழை பெய்ததால் இந்திய அளவில் நடக்கும் தேர்வை தள்ளி வைக்க முடியுமா? தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று கூறியுள்ளார். அப்போது அவரிடம், ஒரு மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் பிரதிநிதி நேரில் வந்து ஒரு கோரிக்கை வைக்கிறேன் அதற்கு இவ்வளவு அலட்சியமாக பதில் சொல்கிறீர்கள் என்றால், மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் நேரில் வந்தால் சந்திக்கக் கூட மாட்டீர்கள் இல்லையா என்று கோபத்தை கொட்டியிருக்கிறார் சிவா.

இதனிடையே தான் ஏற்கனவே பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டதற்கு, இன்று (வெள்ளி) காலை 11.50 மணிக்கு சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. பிரதமரை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துச் சொல்லி தேர்வை தள்ளிவைக்கலாம் என்று நம்பிக்கையில் இருந்தார் சிவா.

திடீரென காலை 10.30 மணிக்கு பிரதமர் அலுவலக அதிகாரிகள் சிவாவை தொடர்பு கொண்டு, பிரதமருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் இன்று நீங்கள் பிரதமரை சந்திக்க முடியாது. பிறகு நேரம் ஒதுக்கி தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனை கேட்டதும் தனது போனை வேகமாக வைத்துவிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்த சிவா, பிரதமர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது.

மக்கள் பிரதிநிதியான நான் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு, அந்த அனுமதியும் கொடுக்கப்பட்டு, நான் தயாராக இருந்த நிலையில், திடீரென பிரதமரை சந்திக்க முடியாது என்று சொல்வது ஏன். தமிழக இளைஞர்கள் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லையா. தமிழகத்தை பற்றியே மத்திய அரசுக்கு கவலையில்லையா. நான் என்ன எனது தனிப்பட்ட விஷயத்துக்காகவா பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டேன்.

மழையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தேர்வை சந்திப்பதில் சிரமம் இருக்கிறது என்று கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். சிவாவை சமாதானப்படுத்திய வெங்கையா நாயுடு, உடனடியாக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பிரதமரை சந்திக்க அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் ஏன் அதனை கேன்சல் செய்தீர்கள். அவர் மாநிலங்களவை உறுப்பினர் என்று தெரிந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனிடையே பிரதமர் அலுவலகத்திற்கு நேராக சென்ற சிவா, பிரதமரை ஏன் சந்திக்க முடியாது. காரணம் சொல்லுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.

பிரதமருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் தான் இன்று சந்திக்க முடியாது என்று கூறினோமே என்று அதிகாரிகள் பதிலளித்தனர். அப்படியானால் நான் எப்போது பிரதமரை சந்திப்பது? என ஆவேசமடைந்தார் சிவா. திங்கள்கிழமை சந்திக்கலாம் என்றனர். தேர்வு தேதி 18. திங்கள்கிழமை தேதி 14. இன்றே சந்தித்தால்தான் தேர்வு தள்ளிவைக்கக் கூடிய கோரிக்கை நியாகமாக இருக்கும்.

வேண்டுமென்றே செய்கிறீர்களா. தமிழகம் பற்றியோ, தமிழக இளைஞர்கள் பற்றியோ மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை இது காட்டுகிறதா என்று சத்தம் போட்டுள்ளார். சிவாவின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைத்ததும், பிரதமரை சந்தித்த சிவா, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், இயல்பு நிலைக்கு திரும்பாத மக்கள் நிலைமையையும், மழை, வெள்ளத்தால் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை எழுதவுள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சிரமங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். மழை, வெள்ளத்தால் பாட புத்தங்களை மாணவர்கள் இழந்துள்ளனர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இணையதளங்களையும் பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர் என்றார். சம்மந்தப்பட்ட அமைச்சரையும், மத்திய தேர்வாணையத் தலைவரையும் சந்தித்தீர்களா என்றார் பிரதமர். சந்தித்தேன். அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை. தங்களின் தலையீடு இருந்தால்தான் இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 18ம் தேதி தேர்வு இருப்பதால், உடனடியாக இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார் சிவா. பரிசீலிக்கிறேன் என பிரதமர் சொன்னதும், பரிசீலிக்கிறேன் என்று சொல்லாதீர்கள், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் நல்லபடியாக அமைய இன்று அல்லது நாளைக்குள் இதற்கான முடிவை எடுத்து அறிவியுங்கள் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைத்துவிட்டு நம்பிக்கையுடன் திரும்பினார் சிவா.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

6 comments:

  1. நல்ல முடிவு கிடைக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. நல்ல முடிவு கிடைக்கட்டும்.....

    ReplyDelete
  3. நல்லதொரு முடிவு விரைவில் கிடைக்க வேண்டும்...

    ReplyDelete
  4. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  5. வணக்கம்...

    உலகின் மாபெரும் தேசத்தின் நான்காவது முக்கிய நகரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது என ஐரோப்பிய நாட்டு செய்திகள் அலறுவதை தேசத்தின் பிரதமருக்கு புரிய வைக்க, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் நடையாய் நடந்திருக்கிறார்...

    தெற்கு பற்றிய வடக்கின் அக்கறை ?!... இல்லை அந்த சமயத்தில் வழக்கம் போலவே பாரத பிரதமர் ஏதாவது வெளிநாட்டு பயணத்தில் இருந்தாரா ?!!!...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  6. நல்ல செய்தி சகோ ..
    திருச்சி சிவா அவர்களின் பொறுப்புணர்வு பாராட்டுகுரியது ..

    தொடர்க பாண்டியன்
    வெங்கட் ஜி உன்னையும் உன் நற்பாதியையும் சந்தித்ததை பகிர்ந்திருந்தார்.
    தம +

    ReplyDelete