அரும்புகள் மலரட்டும்: புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழா 2015 - கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்.

Sunday 13 September 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழா 2015 - கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்.


வலை உறவுகளுக்கான வணக்கம். அனைவரும் நலம் தானே? அதான் நேரிலே சந்திக்க இருக்கோமே அதுக்குள்ள என்ன நலம் விசாரிப்பு என்று தானே கேட்கிறீர்கள்? அதுவும் சரி தான். இன்னும் 27 நாட்களில் நாமெல்லாம் புதுக்கோட்டையில் சங்கமிக்க இருக்கிறோம். அந்த நாளை நினைக்கையில் இதுவரைக் காணாத தூரத்துச் சொந்தங்களை எல்லாம் ஒரே இடத்திம் ஒரே நாளில் சந்திக்க இருக்கிறோம் எனும் உவகை மரத்தில் கட்டிய தொட்டிலென அங்கும் இங்கும் மனதில் ஊஞ்சலாடுகிறது. அனைவரும் வர வேண்டுமென்பதே என் அவா.

புதுக்கோட்டை நண்பர்கள் விழா சிறப்பாக நடைபெற கவிஞர். முத்துநிலவன் அவர்களின் தலைமையில் அனைத்து ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டு காலில் சக்கரம் கட்டியது போல சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விழாவின் சிறப்பம்சமாக பதிவர் கையேடு தர இருப்பது கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் சிந்தையில் தோன்றிய சிறப்புமிக்க திட்டம். முதலில் அவருக்கு நமது நன்றிகள்.

பதிவர் கையேட்டினால் என்ன பயன்?
வலையுலகில் எண்ணற்ற படைப்பாளிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒவ்வொரு பக்கமாக சென்று நாம் அடையாளம் தெரிந்து கொள்வது என்பது சாதாரணமான விசயமா? ஆனால் பதிவர் சந்திப்பு விழாவில் தரப் போகிற கையேட்டினால் இது சாத்தியம்.

நான் வலைப்பக்கம் தொடங்கிய பிறகு பல மாதங்கள் கழித்து தான் எனது அடுத்த தெருவில் இருக்கும் சக பதிவரை அடையாளம் கண்டு கொண்டேன். இனி அது போன்ற பிரச்சனைகள் இல்லை. மாவட்ட வாரியாக பதிவர்களை நாம் எளிதாக அறிந்து கொள்ள இக்கையேடு கை கொடுக்கும்.

மாவட்ட வாரியாக பதிவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டால் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கமாக இயங்க வழிவகை உண்டு. இச்சங்கத்தின் மூலம் படைப்பாளிகளை ஊக்குவிக்கலாம். படைப்புகள் நூலாக வெளிவர உதவலாம். நாளொன்றுக்கு எத்தனையோ கட்டுரைகள், கவிதைகள் வலைப்பக்கங்களில் பதிவிடப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் புத்தகமாக வெளிவருகிறதா இல்லையே?

அதற்கு நூலாக வெளியிட நிதி இல்லாமையே காரணமாக இருக்கலாம். சங்கமாக நாம் செயல்பட்டால் நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சங்கத்தின் சார்பில் நூலாக வெளியிடலாம். அதற்காக சங்க உறுப்பினர்களிடம் ஆண்டிற்கு சிறுதொகை பெற்றாலே போதுமானது. (இதைக் கடைபிடிப்பதில் வெளிப்படைத் தன்மை முக்கியம்)

படைப்பாளிகளை ஒருங்கிணைப்பது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் இப்போது இருக்கும் பதிவர்கள் மட்டும் அதற்கு போதுமா! வலைப்பக்கங்களை விட அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் மற்ற சமூகத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டாமா? அவர்களையும் ஒருங்கிணைத்து தமிழின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டாமா?

 அண்டை மாநிலமான கேரளாவின் மலையாளக் கவிஞர்கள் (படைப்பாளிகள்) எல்லாம் ஏகத்துக்கும் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் இனிமேலும் தாமதிக்க வேண்டுமா? அனைத்து தளத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம் நண்பர்களே!

படைப்பாளிகளை ஒருங்கிணைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழாவைப் பற்றிய செய்தியையும், பதிவர்கள் கையேடு வழங்கும் செய்தியையும் நமக்கு தெரிந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் தெரியப்படுத்த வேண்டும். அதன் பின் முகநூலில் எழுதி வரும் நண்பர்களை வலைப்பக்கம் தொடங்க வைக்க வேண்டும். தொடங்கிய பிறகு வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு அழைத்து வருவதும் நமது கடமை. வருகையை உறுதியைச் செய்ய வருகை படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் அவர்களும் நமது பதிவர்கள் கையேட்டில் இடம் பெறுவார்கள். அவர்களையெல்லாம் புதுக்கோட்டை அழைத்து வர ஒரு நிகழ்வே போதும். அந்நிகழ்வு என்ன?

தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள் நண்பர்களே!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை““தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ இணைந்து நடத்தும் போட்டியானது நமக்கு தமிழ்நாடு அரசு சார்ந்த நிறுவனமொன்று அளித்திருக்கின்ற மிகப் பெரிய அங்கீகாரம்.

இந்த அங்கீகாரத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது நண்பர்களே. முகநூலில் எழுதி வரும் நம் நண்பர்களை வலைப்பக்கத்தில் எழுத வைப்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது நீங்களெல்லாம் நன்கறிவீர்கள். இதோ இப்பொழுதே இந்நிகழ்வு பற்றிய செய்தியை ஒவ்வொருவரும் முகநூலில் பகிர்ந்து நண்பர்களை அழைக்க புறப்பட்டு விட்டீர்கள் என்று நம்புகிறேன். இனி இங்கே எனக்கென்ன வேலை? அனைவரிடமிருந்தும் விடைப்பெற்றுக் கொள்கிறேன். நன்றி..




கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

  1. அப்படிப்போடுங்க! தம்பி பாண்டியன், இளைஞர்கள் பார்வை மட்டுமல்ல எழுதும் பாணியும் வித்தியாசம்தான் நல்லா எழுதியிருக்கீங்க.. நாமும் தமிழ்எழுத்தாளரைக் கணினி வழி இணைத்து இணைந்து வளர்ப்போம்

    ReplyDelete
  2. வலைப்பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விழா மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதை இத்தனை நிகழ்வுகளும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  4. நல்லதொரு தொகுப்பு நண்பரே! அருமை! கை கோர்ப்போம் விழா சிறக்கும்...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் . வெற்றி பெறுக. அனைவருக்கும் என் அன்பு.

    ReplyDelete
  6. வலைபதிவர் கையேட்டின் முக்கியத்துவத்தை மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் சகோ!!! அருமை !! வாழ்த்துக்கள்! அப்புறம் போட்டிக் கட்டுரைகளும், கவிதைளும் எப்போவரபோகுது தம்பி!! ஆவலா வெய்டிங்!

    ReplyDelete
  7. விழா இப்பொழுதே களை கட்டத்தொடங்கிவிட்டது நண்பரே
    நன்றி

    ReplyDelete
  8. பெருமுயற்சியில் முன் நிற்கும், துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் கைகொடுப்போம்.

    ReplyDelete
  9. அப்பாடா... ஜோதியில் கலந்து கொண்டு விட்டீர்கள்...

    விளக்கமாக அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்... நன்றி சகோதரா...

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.

    பதிவர்கள் சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  11. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  12. தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் நமக்கு அளித்துள்ள அங்கீகாரத்திற்கேற்ப மின் தமிழ் இலக்கியப் போட்டிகளும் வலைப்பதிவர் திருவிழாவும் மிகச் சிறப்பாகவே நடந்தேறும்- தங்களைப் போன்ற செயல் திறமிக்க இளைய தலைமுறையின் ஒத்துழைப்போடு..

    ReplyDelete