அரும்புகள் மலரட்டும்: மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்

Saturday 10 January 2015

மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்

மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும்.

அதாவது ஒரு மெட்ரிக் டன் கோதுமைக்கு தேவைப்படும் நீரின் அளவு 1,600 கியூபிக் மீட்டர் ஆகும். ஆனால் கோதுமை விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. எனினும் அந்த நீர், கோதுமை தானியங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதால் அதில் மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். இவ்வாறு ஒரு மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை செலவழிக்கிறது. அதேப்போல ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை சேமித்துக்கொள்கிறது. இதுவே மறை நீர் பொருளாதார தத்துவம் ஆகும்.
புத்திசாலிநாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறைநீர் தேவை 5,988 லிட்டர்.
அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர்பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறைநீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
நமது இந்திய  நாட்டின் நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒருநாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடாநாடுகள், ஆப்பிரிக்கா மற்றும்  ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள்  அன்னிய செலவாணி கிடைக்கிறது.
வளைகுடா  மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக  60  கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறைநீர் தேவை. மூன்று  ரூபாய்  முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்த பட்ச விலைக்குச்சமம் என்பது எந்த ஊர்  நியாயம்?  முட்டையினுள்  இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறைநீர் தேவை.  ஒரு கிலோ  பிராய்லர்  கோழிக்கறி  உற்பத்திக்கான  மறைநீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக் குஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடைகொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறைநீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக  5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறைநீர்தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறுகிலோ தோல்கிடைக்கும்.
ஒருகிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறைநீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டிதயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறைநீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட்தயாரிக்க 10,000 லிட்டர் மறைநீர்தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியது தானே? அப்படிஎனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக்கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார்வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம் பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்யவேண்டாம் என்கிறது மறைநீர் பொருளாதாரம்.
மறைநீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறைநீர் தத்துவத்தை உணரவேண்டும்.
இனியாவது உணர்வோமா??
                  நன்றி: வேளாண்மை தளம்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

  1. சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. மறைநீர்.. இன்றுதான் அறிகிறேன்ன்.. புதிய சொல்லை எமக்கு அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பொதுவாக எவரும் இது பற்றிக் கவலைப்படுவதில்லை.ஒரு விழிப்புணர்வாக உள்ளது. பயனுள்ள பகிர்வு,

    ReplyDelete
  4. தம +
    அருமையான விழிப்புணர்வு
    நீங்கள் எழுதியதில் எனக்கு ரொம்ப பிடித்த பதிவுகளில் ஒன்று ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக் அமிக அருமையான பதிவு! பயனுள்ள அறிவு சார்ந்த பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நாம் ஏமாளிகள் என்பது உறுதியாகிறது...?

    ReplyDelete

  7. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  8. oru aalukku evvalavu selavu aagum> en ippadi kuzhanthaigalai petru thallukirom? itharkku ethavathu pathil unda??

    ReplyDelete
  9. இப்படி கணக்கில் வராத விடயங்கள் நிறைய இருக்கும் போல் உள்ளது இல்லையா? ம்..ம்.. நல்ல விடயம் பாண்டியா. தலைப் பொங்கல் அல்லவா இது ம்..ம். இருவருக்கும் இனிய பொங்கல். வாழ்த்துக்கள். ..!

    ReplyDelete