அரும்புகள் மலரட்டும்: கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை

Tuesday 20 January 2015

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-
organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த
நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில்  தங்கள் நாட்டு மாணவர்களின்
கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு
PISA-Programme for international students assessment என்று பெயர்.

மற்ற நாடுகள் விருப்பப்பட்டால் இதில்சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க. பின்லாந்து எப்போதும்
முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.

அப்படி  என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்,இரண்டரை வயதில்
 ப்ரீ-கேஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை.

கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில்உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்.

 இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால் அறிவு
அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு
கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான்.

அந்த நேரத்திலும்கூட படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே
முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டுக்கும் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரஸ் ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது.  தங்கள் பிள்ளையின் கற்றல் திறன்
குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால் தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக
மதிப்பெண் எடுக்கும் டென்ஷன் மாணவர்களுக்கு இல்லை.  சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை. மாணவர்களுக்கு எந்தப்
பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து
வரலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின்
உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள்
வழங்குவார். ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள்
இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. முக்கியமாக
பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது.

அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீஸ்வரராக
இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக
இருந்தாலும்... அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க
வேண்டும். 'என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு
உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது.

அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம்
குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். 'டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்விமுறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான் உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி
என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்.

அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு
ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில்
பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர்எதுவும் இல்லை.

பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த
நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே
வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின்
கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. 'பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது
எனச் சொல்ல முடியாது. PISA  ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள்.

இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே
முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது
பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை. கல்வியில் இருந்து நாம்
பெறவேண்டிய சாராம்சம்  இதுதான்.

இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும் பராமரிப்பதிலும்
பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால்
பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின்
செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப்
 பங்கு உண்டு.

மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்
லட்சியம். அதேநேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!
மேல்நிலை வகுப்பில் டாப் 10 இடம் பிடிக்கும் மாணவர்களில் இருந்து
ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு
வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில்
பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று... என
ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும்
சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும்
மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!

“தாய்மொழி கல்விதான்  சிறந்தது!”
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் பின்லாந்தின் கல்வி
அமைச்சராக இருந்த ஹென்னா மரியா விர்க்குனன் (Henna maria virkkunen), பின்லாந்தின் கல்விமுறை குறித்து www.hechingerreport.org என்ற கல்வி இணைய
இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்...
''பின்லாந்து ஆசிரியர்கள் ~சிறப்பாகச் செயல்படுவது எப்படி?''
''பின்லாந்தில் ஆசிரியர் பணி மிகவும் மதிப்புமிக்க இடத்தில் இருக்கிறது.
இளைஞர்கள் ஆசிரியர் ஆவதை தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆசிரியர் பயிற்சி படிப்பு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் அது ஆராய்ச்சி அடிப்படையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்கள் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளலாம். அதற்கான
உரிமை அவர்களுக்கு உண்டு. அதேபோல, எங்கள் கல்விமுறை நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளில் ஆய்வு நடைபெறும் என்றாலும் அதன் நோக்கம், ஆசிரியர்களைக் கண்காணிப்பது அல்ல; கல்விநிலையை மேம்படுத்துவதாகவே இருக்கும். நாம் எல்லோரும் மனிதர்கள். நம்பிக்கைதான் அடிப்படையாக இருக்க
வேண்டும்''

''பின்லாந்தில் புலம்பெயர்ந்து வரும் அகதிகளின் குழந்தைகளுக்கு எவ்வாறு
போதிக்கப்படுகிறது?''
''எங்கள் நாட்டில் அகதிகள் குறைவு. ஹெல்சின்கி (Helsinki) என்ற பகுதியில்
அதிகபட்சமாக 30 சதவிகிதமாணவர்கள் புலம்பெயர்ந்தோர். பலவீனமான கல்வி மற்றும் சமூகப் பின்னணியில் இருந்துவரும் இவர்களை, வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்பும் முன்பாக, ஒரு வருட காலம் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பி தயார்படுத்துகிறோம். அதைப்போலவே புலம்பெயர் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மொழியைக் கற்பிப்பதில் முனைப்புடன்
இருக்கிறோம். தாய்மொழியைப் பயில்வதன்மூலம்தான் ஒரு குழந்தை
உண்மையான கல்வியைப் பெற முடியும். ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக்கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது.

எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது
மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக்
கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''

''பின்லாந்து கல்விமுறையில் இருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''
''இது கடினமான கேள்வி. கல்வி என்பது ஒரு நாட்டின் உள்ளூர் மக்களுடனும்
வரலாற்றுடனும் இணைந்திருக்கிறது. அதனால் ஒரு நாட்டின் கல்விமுறையை இன்னோரு நாட்டுக்குப் பொருத்துவது சரியாக இருக்காது. ஆனால், மிகச் சிறந்த ஆசிரியர்கள்தான் சிறந்த கல்விக்கான அடிப்படை. ஆசிரியர் பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தி வடிவமைப்பதும், அவர்களின் பணிபுரியும் சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதும் முக்கியம். நல்ல ஊதியம் அளிப்பதும் அவசியமானது என்றபோதிலும் அது ஒரு நிபந்தனை அல்ல.

பின்லாந்தில் மற்ற தொழில் துறை பணிகளில் இருப்போர் பெறும் சராசரி
ஊதியத்தையே ஆசிரியர்களும் பெறுகின்றனர்!''

''பின்லாந்து கல்விமுறை குறித்து அதிகம் அறியப்படாத செய்திகள் எவை?''
''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வகுப்பறையில் தான்
கற்பிக்கிறோம். நல்ல பள்ளி புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற
பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. கற்றல் குறைபாட்டுடன் இருக்கும்
குழந்தைகளிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

முக்கியமாக, வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம்
21 பேர்தான். அதைத் தாண்டினால் ஆசிரியரால் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியாது. அதேபோல எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும்
நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில்
இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை நாங்கள்
நம்பவில்லை. விளையாடவும், பொழுதுபோக்கவும், வீட்டுப்பாடம் செய்யவும்
அவர்களுக்கு நேரம் தர வேண்டும்!''


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

19 comments:

  1. வணக்கம்
    சகோ.

    சிறப்பான கருத்தாடல் பகிர்வுக்கு நன்றி தொடருகிறேன் பதிவை... த.ம 1
    பின்பு வந்து கருத்து இடுகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள். நண்பர் பகிர்ந்த தகவல் பயனுள்ளதாக இருந்ததால் இங்கு பகிர்ந்து விட்டேன்.

      Delete
  2. பின்லாந்தின் கல்வி முறையைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. இது பற்றி நான் இதுவரை படித்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டும் தொலைபேசியில் அழைத்தும் பேசியமைக்கும் என் அன்பான நன்றிகள் ஐயா.

      Delete
  3. பின்லாந்து கல்வி முறை பற்றி அறியத் தந்தீர்கள்.
    அருமையான கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்

      Delete
  4. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.முற்றிலும் புதிய செய்திகள்.அரசுப்பள்ளிகள் ,தாய்மொழிக்கல்வி,ஏழு வயதில்தான் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது அனைத்துமே நாம் பின்பற்ற வேண்டிய செய்திகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  5. இந்தக் கட்டுரையை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்
    தம +

    ReplyDelete
    Replies
    1. என் நண்பன் விஜயசாரதிக்கே தங்களின் பாராட்டுகள் சென்றடையும். தமிழ்மண வாக்குக்கும் நன்றிகள் சகோ..

      Delete
  6. Thanks for kind of posting . Every parents should read and think twice before they act.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  7. இதைப் பற்றி வாசித்திருக்கின்றோம். மிகவும் அருமையான கல்வி முறை நமது நாடு தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. ஜப்பானிலும் கூட கல்வி முறை கூட கிட்டத்தட்ட இது போன்றதுதான்...

    //எங்களுக்கு இது சவாலான வேலைதான். என்றாலும் தாய்மொழியைக் கற்பது
    மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக்
    கற்றுக்கொள்ளும்போதுதான் பின்னிஷ் (Finnish- பின்லாந்து மொழி), ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்!''//

    இதை இந்தியப் பெற்றோர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய வாசகம்....

    ReplyDelete
    Replies
    1. என்னோடு ஆசிரியர் பயிற்சி படித்த நண்பர்கள் வாட்ஸ் அப் இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து அறிவுக்கு விருந்தளிப்பதில் வல்லவர்கள். நண்பன் சாரதி பகிர்ந்ததே இங்கு பதிவாகியது. இதற்கு முன் ஆனந்த விகடன், தமிழ்செய்தி ஆகியவற்றில் வெளி வந்தததாக தகவல் அறிந்தேன் ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
    2. ஜப்பானில் கல்வி எப்படிக் கற்பிக்கப்படுகின்றது என்பது வாட்சப்பில் வந்திருக்குமே உங்களுக்கு....அது சில நாட்களுக்கு முன் சுற்றி வந்தது...அதைப் பகிர நினைத்துள்ளோம்..நண்பரே!

      Delete
  8. ஆக இத்தனை சிறப்பாக கல்விமுறை இருப்பதற்கு ஆசிரியர்களை முதலில் நன்றாக பட்டதீட்டுகிரார்கள் இல்லையா சகோ? நம்மூர் போல கல்வித்தந்தைகள் காசுவாங்கிக்கொண்டு, fake அட்டெண்டன்ஸ் போட்டு.ரெண்டு வருஷம் கடமைக்கு படித்து, தேர்வில் வாந்தி எடுத்து ஆசிரியர்கள் உருவாதில்லை. ஏழு வயது வரை பள்ளிக்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை!!! நாம் சிந்திக்க பலநூறு விஷயங்கள் இருக்கிறது சகோ. அருமையான பகிர்வு! வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. சிறந்த பதிவு . பின்லாந்து கல்வி முறையின் சிறப்பு அம்சங்கள் பொறாமை கொள்ள வைக்கின்றன.நாம் நாட்டில் இருந்தும் வல்லுனர்களை அனுப்பி ஆராய்ந்து நமக்கேற்ற மாற்றங்கள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்

    ReplyDelete
  10. மிகச்சிறந்த பதிவு அய்யா!
    //பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED-
    organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த
    நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில் தங்கள் நாட்டு மாணவர்களின்
    கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு
    PISA-Programme for international students assessment என்று பெயர்.// இதுபற்றிபடித்திருக்கின்றேன். கொஞ்ச வருடங்களுக்கு முன்னர்தான் நமது நாடும் இதில் இணைந்துள்ளது என்றும், 'நமது மானவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது' இதன் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் படித்துள்ளேன். இதற்குக்காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று நான் சிந்தித்ததில், ஆசிரியர்கள் சரியில்லை! ஆசிரியத் தொழிலுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுதான் காரணம் என்று நான் சிந்தித்ததுண்டு! அதுதான் உண்மை என்பது உங்கள் பதிவில் உறுதியாகிவிட்டது! உங்கள் பதிவுக்கு மிக்கநன்றி!

    ReplyDelete
  11. இலங்கையிலிருந்து....
    இலங்கையின் SLEAS இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சைக்கு மிகவும்அவசியமான தகவல். நண்பருக்கு கோடி நன்றிகள்.

    ReplyDelete