அரும்புகள் மலரட்டும்: சீறிய ராம்- சமாளித்த விஜய் டிவி

Tuesday 22 July 2014

சீறிய ராம்- சமாளித்த விஜய் டிவி



நண்பர்களுக்கு வணக்கம்
நான் அனேகமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஆசிய சேனல்களில் முதல் சேனல் உங்கள் விஜய் டிவி என்று ஒரு குதிரை ஓடி வரும். அது தான் அன்று விஜய் டிவிக்கான விளம்பரமாக இருந்தது. தற்போது ஸ்டார் விஜய் டிவியாக மாறியிருக்கிறது. ஸ்டார் விஜய் ஆக உருமாறிய பின்னர் மேற்கத்திய கலாச்சாரத்தை அரிதாரமாக தன் அங்கம் எல்லாம் பூசிக்கொண்டது.அதன் பிறகு விஜய் டிவி தேடிக் கொண்ட விளம்பரங்கள் எத்தனை எத்தனை! இருப்பினும் நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் தயங்கவில்லை.

அதன் உச்சமாக இன்று சிவக்கார்த்திகேயனைத் தன் வீட்டு பிள்ளையாகத் தூக்கிக் கொண்டாடுகிறது விஜய் டிவி. இது எல்லாம் நல்ல விசயம் தானே என்று தானே சொல்லுகிறீர்கள் இருங்க நண்பர்களே நான் விசயத்துக்கே வரவில்லை..

கடந்த ஞாயிறு அன்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. திரைப்பட நட்சத்திரங்கள் அணிவகுத்திருந்தால் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருந்தது.( நான் சத்தியமா கதாநாயகிகளை மட்டும் மனுசல வச்சுக்கிட்டு சொல்லலங்க நம்ம கதாநாயகர்களையும் சேர்த்து தான் சொல்றேன் நம்பிட்டீங்க தானே).

கற்றது தமிழ் ராம் அவர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்க மீன்கள் படத்திற்காக விருது வாங்க மேடையேறி அவர் பேசியதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தங்க மீன்கள் படத்தில் நடித்து தேசியவிருது பெற்ற அந்த குழந்தை நட்சத்திரம் எனக்கு விஜய் அவார்ட்ஸ் கொடுப்பாங்க நான் எப்ப வரட்டும் என்று எதிர்பார்ப்போடு இருந்திருக்கிறது ஆனால் விஜய் அவார்ட்ஸில் குழந்தைகளுக்கு விருது என ஒரு பிரிவு கிடையாதாம்.

அவர்களுக்கும் விருது கொடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து தேசிய விருது பெற்ற ”ஆனந்த யாழை மீட்டுகிறாள்” எனும் பாடலை விருதுக்கு விஜய் டிவி பரிந்துரை கூட செய்யவில்லை எனும் ஆதங்கத்தை மேடை ஏறிய மனிதர் விஜய் டிவியைப் புகழ்வது போல பேசி ஒரு பிடி பிடித்தார் பாருங்கள்.

உண்மையில் இவ்வளவு நாசுக்காக நெற்றியில் அடித்த மாதிரி பேச முடியாது. அத்தோடு அந்த பாடலின் வரிகளை யாராவது பாட முடியுமா பாடினால் தான் மேடையை விட்டு இறங்குவேன் என்று சொல்லி தனது உதவி இயக்குநரை பாட வைத்து விட்டு தான் மேடையை விட்டு இறங்கினார். மானமுள்ள அந்த மனிதன் விஜய் டிவி வழங்கிய அந்த விருதை தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை. பாடலுக்கு இசை அமைத்த யுவன்சங்கர் ராஜா அவர்களிடம் கொடுத்து விட்டார். தன் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத போது ஒரு கலைஞனிடம் இருக்க வேண்டிய கோபமும் ஆதங்கமும் என்னை வெகுவாக ரசிக்க வைத்தது.

என்ன செய்வது என்றறியாத விஜய் டிவி குழுமம் உடனே அந்த பாடலை விருதுக்கு பரிந்துரைத்தும், ராமின் கோபத்தை வைத்து ஒரு கிளிப்பிங்ஸ் போட்டும் சமாளித்தது. உண்மையில் விஜய் அவார்ட்ஸ் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக விஜய் டிவியால் அமைக்கப்பட்ட யூகி சேது, பிரதாப் போத்தன் போன்றவர்கள் அடங்கிய தேர்வு குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் அவர்களின் போக்கிலும், விஜய் டிவியின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் விருதுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த விழாவை மிக பிரமாண்டமாக நடத்தி விளம்பரதாரர்கள் பலரைப் பெற்று காசு பார்த்தும், தன்னால் வளர்த்து விட பட்டவர்களை அழ வைத்து விளம்பரமும் தேடிக் கொள்கிறது விஜய் டிவி.

உண்மையில் ஒரு கலைஞனின் கலைத்திறனைப் பாராட்டி விருது கொடுக்க வேண்டுமானால் சூப்பர் சிங்கர் பரிசுக்கு மக்கள் வாக்களிப்பது போல விஜய் அவார்ட்ஸ்க்கும் மக்களே வாக்களிக்க வேண்டும். அதன் முடிவினை எந்தவித ஒளிவுமறைவின்றி அப்படியே வெளியிட வேண்டும். அது தான் திறமையான கலைஞனை மதிப்பதற்கு சமம் என்பது எனது கருத்து..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

  1. வணக்கம் சகோ
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தா.ம இரண்டு
    http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

    ReplyDelete
  3. நல்ல பதிவு தம்பி பாண்டியன்! ராம் அவர்களுக்கு சபாஷ்! சுய மரியாதையும், தன் மானமும் உள்ள மனிதர்தான்!

    விஜய் டிவி கார்த்திகேயனை அழ விட்டு - திரு கோபிநாத் அவர்கள் சிவthஇகேயனிடம் கேட்ட அந்தக் கேள்வி வேண்டுமென்றே கேட்கப்பட்டதோ என்றுதான் தோன்றுகின்றது - அதைத் திரும்ப திரும்ப போட்டு ஒரு எமோஷனல் ட்ராமா செய்யலாமே! என்ற நோக்கத்துடன். அதுதான் அவர்கள் வாடிக்கை! அதை கார்த்திகேயன் மேடை ஏறியவுடன் சொல்லவும் வேறு செய்தார்...வீட்டுல சொல்லித்தான் அனுப்பினாங்க....அழுதுராத..அப்புறம் விஜய் டி.வி அதத் திரும்பத் திரும்பப் போட்டு காட்டுவாய்ங்கனு......எல்லாமே ப்ளான்ட் ட்ராமா போலத்தான் தோன்றுகின்றது. மட்டுமல்ல அவர்களின் விருதுகளின் மதிப்பும் குறைந்துவிட்டது! (இந்தியாவில் பெரும்பான்மையான விருதுகளுக்கு மதிப்பே கிடையாது...திறமைக்கு கொடுக்கப்பட்டால்தானே மதிப்பு.....எல்லாமே லாபியிங்கில்தான் நடப்பதால்....

    நல்ல பதிவு!

    ReplyDelete
  4. ஒவ்வொரு நிலையிலும் வர்த்தகத்தை மனதில் கொண்டு அதற்கேற்றவாரு வியூகம் அமைத்து கார்ப்பரேட் மூளையால் வடிவமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிதான் இந்த விஜய் அவார்ட்ஸ்..இது முழுவதும் செட்டப் செய்யப்பட்ட நிகழ்ச்சி என்று நன்றாக தெரிந்திருந்தும் டைம் பாஸுக்காகவும் தனது மானசீக நடிகர் நடிகைகளையும் பார்க்க, விஷயம் அறிந்தவர்களும் அங்கே செல்கிறார்கள்..

    எதிர்மறை விமர்சனம் மூலமாகவும் விளம்பரம் தேடிக்கொள்ள முடியும் என்பதை தொலைக்காட்சியினர் நிரூபித்து லாபம் பார்ப்பவர்கள் இந்த விஜய்டிவியினர் நாமும் அவர்களின் நிகழ்ச்சிகளை விமர்சிப்பதன் மூலம் ஹிட்டுக்களை அள்ளுகிறோம் ஆனால் பாவம் விஜய் டீவி நேயர்கள்தான் லூசாக இருக்கின்றனர்

    ReplyDelete
  5. நியாயமானவனுக்குத்தான் கோபம் வரும் நணபரே..
    அதற்காக கோபம் வராதவர்களெல்லாம் நியாயமற்றவர்கள் என்றும் அர்த்தமல்ல....
    நல்லதொரு செய்தி வாழ்த்துக்கள் நண்பா,,,

    ReplyDelete
  6. எல்லாம் பணம் செய்யும் மாயை சகோதரா....!

    ReplyDelete
  7. தம்பி, விஜய் டிவி, ரூபர்ட் மர்டாக்கின் ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்தது. காசு பார்க்கும்படியான வழிகளை மட்டுமே அவர்கள் கையாளுவார்கள். இங்கு மட்டுமல்ல, உலகம் முழுதுமே அவர்களின் செயல்பாடு இப்படித்தான். எனவே தார்மிக நெறிகளை எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

    ReplyDelete
  8. நானும் இரசித்தேன்...? பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்ல. ஆனா, ஆனந்த யாழினை மீட்டுக்கின்றாள் பாடல் பரிந்துரைக்காதது நிச்சயம் ரசனை இல்லாததுதான்

    ReplyDelete
  10. மிகச் சரியாக சொன்னீர்கள். ஆனால் மக்கள் வாக்களித்தால், அவர்கள் உரிமம் வாங்கிய படங்களுக்கு விருதுகள் வராதே.....

    ReplyDelete
  11. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
    தொடருங்கள்

    ReplyDelete
  12. விஜய் விருதுகள் கேலிக்குரியதாகிவிட்டது! சூப்பர் சிங்கர் கூட சோதனைக்கு உட்பட்டதுதான்!

    ReplyDelete
  13. தங்களின் கருத்தே என் கருத்தும் நண்பரே
    தம 5

    ReplyDelete
  14. நச்சுன்னு சொன்னீங்க சகோ!
    அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்:))
    இந்த சுயமரியாதை வெகு சில படைப்பாளிகளிடம் மட்டுமே மிச்சம் இருக்கிறது! தம ஆறு!

    ReplyDelete
  15. If you believe that the Super Singer, senior or junior is elected by the people, you are too innocent!!!. Voting by the people is just to collect money and for providing cover. I cant recollect any of their talent show that didnt have a controversial winner. Can you?!

    ReplyDelete
  16. சூப்பர் சிங்கரும் நேர்மையான முடிவுகள் அல்ல. அதிலும் தில்லு முல்லு தான்.

    ReplyDelete
  17. என்னப்பா பாண்டியா உடனும் பதிவு போட்டாச்சா புது மாப்பிள்ளை இப்போ வரமாட்டார் ஏன்றல்லவா நினைத்தேன். மனசு தாங்க முடியா தவிடயம் ஆகையால் பதிவு உடனும் போட்டு விட்டீர்கள் இல்லையா.
    சிந்திக்க வேண்டிய விடயம் தான். நியாயமாக நடக்காவிட்டால் கோபம் வரத் தானே செய்யும். மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாண்டியரே....!

    ReplyDelete
  18. விஜய் டிவியின் நிறம் கலையத் தொடங்கியிருக்கிறது. நல்ல பதிவு.

    ReplyDelete
  19. உண்மைதான் நானும் பாராட்டினேன் ராம் அவர்களின் உணர்வை.

    ReplyDelete
  20. நாடகம் போடும் தொலைக்காட்சி
    நாடகம் போட்டே தொலைக்காட்சி
    நயந்தே இழுக்கும் தொலைக்காட்சி
    நாணயம் போகுதே இப்போ தொலைக்காட்சி
    நாலுபேர் அறியட்டும் இப்போ தொலைக்காட்சி
    நடுநிலை விருது இல்லையேல் தொலைக்காட்சி
    நாலுபேர் கேட்பது தான் அழகு தொலைக்காட்சி.

    நல்ல பகிர்வு.
    திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. ஒரு கலைஞனின் கோபம்.

    ReplyDelete
  22. நியாயமான கோபம். நியாயமான பகிர்வு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete