அரும்புகள் மலரட்டும்: தடம் மாறும் இளைஞர்கள் தடுமாறும் தமிழகம்

Monday 14 April 2014

தடம் மாறும் இளைஞர்கள் தடுமாறும் தமிழகம்

நிகழ்வு 1

திருச்சியிலிருந்து மதுரை நோக்கி விரைந்து செல்லும் பேருந்து சற்று வேகம் குறைத்து சாலையிலிருந்து விலகி ஒரு கடையில் நிற்கிறது. பேருந்து பத்து நிமிடம் இங்கு நிற்கும் பயணிகள் விரைவாக மது அருந்தி விட்டு வந்து விடுங்கள் என்று அறிவிப்பை நடத்துநர் அறிவித்து விட்டு தனது இலவச மதுவை உண்டு மகிழ சென்று விடுகிறார்
நிகழ்வு 2
சாலை ஓரத்தில் ஓர் இளைஞன் விபத்துக்குள்ளாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.அந்த வழியே சென்ற பாண்டியன் அவரை தூக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கிறான். விபத்துள்ளாவருக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும் ஏ பாஸிட்டிவ் ரத்த வகை உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் ரத்தம் கொடுக்க அழையுங்கள் என்று சொல்கிறார்கள். நல்ல வேலை என்னுடைய ரத்தம் ஏ பாஸிட்டிவ் தானுங்க தான் தருகிறேன் என்று பாண்டியன் சொல்ல அவரை மருத்துவர்கள் அழைத்துச் சென்று பரிசோதித்து விட்டு நீங்க குடிக்காம இருக்கீங்க உங்க ரத்தத்துல ஆல்கஹாலே இல்லை மன்னிக்கவும் உங்க ரத்தம் அவருக்கு சரி வராது என்று கை விரித்து விட்டார்கள்.

வணக்கம் நண்பர்களே!
 மேலே கண்ட இரு நிகழ்வுகளும் கொஞ்சம் மிகைப்படுத்தியும் கற்பனைத் தனமான இருந்தாலும் இது போன்ற சம்பங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்பதை இன்றைய சூழலை வைத்து எவ்வாறு சொல்ல முடியும்? சிறியர்வர்கள் முதல் பெரியவர்கள் வரை சமமாக உட்கார்ந்து தண்ணீ அடிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது (ஒரு வேளை சமத்துவம் என்பதைத் தவறாக புரிந்து கொண்டார்களோ). எங்க அப்பாவும் நானும் சேர்ந்து தண்ணீ அடிப்போம், எங்க மாமா வெளி நாட்டு சரக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தார் இப்படி ஏக வசனங்கள் எனது காது பட கேட்டாச்சு. இன்றைய இளைஞர்கள் மத்தியில் எங்கு பார்த்தாலும் மது மண்டிக்கிடக்கிறது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஏன் பள்ளி மாணவர்கள் கூட மது விற்கும் கடையில் ஒரு கையில் காசு கொடுத்து மறு கையைப் பாட்டிலுக்காக ஏந்தி நிற்கும் அவலக் காட்சிகளும், ஊருக்கு வெளியில் அதாவது பாலம், சாலையோரம் உட்கார்ந்து மது குடிக்கும் அசிங்களும் அன்றாடம் அரங்கேறுகிறது (அது தான் இப்ப ஃபேசன் னு சொல்லிக்கிறாங்க).

தமிழகத்தில் மது அருந்துவோரின் சராசரி வயது 13 என்கிறது ஒரு புள்ளி விபரம். பெரிசுகள் மதுவுக்கு அடிமையாகி தனது வாழ்நாளை தொலைத்தது பற்றி கூட நான் அதிகம் கவலைப் படவில்லை. இளைஞர்களின் மது பழக்கம் தான் அதிக வேதனையைத் தருகிறது. முக்கிய பண்டிகை தினங்கள், வீட்டு விழாக்கள் என்றிருந்த மது பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவி அதிகாலையிலே மது அருந்தும் பழக்கம் வந்து விட்டதை என்னவென்று சொல்வது? இன்றைக்கு திருமணத்திற்கும் மது இலவுக்கும் மது ஏன் புது ஆடை உடுத்தினால் மது என்று கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் வாசல் மிதிப்பது ஆளுபவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா! அவர்களுக்கு ஏற்றாற்போல் அரசு மது விற்பனை அதிகப்படுத்தியுள்ளது.

தனது நாட்டுக்காக, குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய மூளைசக்தி மது எனும் அரக்கனால் பாழ்பட்டு வருகிறது. மதுவுக்காக பொய் சொல்லுதல். திருடுதல், கடத்தல் என்று அதிகரித்துள்ளது. மது அருந்தியவுடன் வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாவது, பாலியல் வன்கொடுமை போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வைக்கிறது.

என்று தணியும் இந்த போதையின் தாகம்!

உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி உலகில் 2 பில்லியன் மக்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களில் 75 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் மதுப்பழக்கத்தினால் உண்டான உடல் உபாதைகளினால் அவதிப்படுகின்றனர். மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களினால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் 9 சதவிகித இறப்புக்கு மதுப்பழக்கம் நேரிடையான காரணமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தியமை, அதன் ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் தாராளம் இவையே அதற்கு காரணம் எனவும் அது கூறுகிறது.

தமிழ்நாட்டில் ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதில் பெரும்பாலும் ஆண்களே எனினும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆய்வில், பெண்களும் கிட்டதட்ட ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 1950களில் 23 ஆக இருந்து மது அருந்துவோரின் சராசரி வயது 90களில் 19 ஆக குறைந்து தற்போது 13 ஆகக் குறைந்துள்ளது. டாஸ்மாக் போன்ற மதுமான சமூக அங்கிகாரம் மற்றும் வாய்ப்புக்கள் காரணமாக வரும்காலங்களில் இது மேலும் குறையும் என்பது மறுப்பதற்கில்லை.

சமுதாயத்தில், பல்வேறு தரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளில், உண்மையான சமுதாய அக்கறையுடன் தொலைநோக்குப் பார்வையுடன், நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை வருங்கால சந்ததி நிச்சயம் போற்றும்; நாட்டுக்கு வருமானம் முக்கியம் என்றால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நிச்சயம் பெருக்கிக் கொள்ள முடியும். மதுக்கடைகளை தன்கையில் எடுத்துக் கொண்ட அரசு மணல், கிரானைட் கல்குவாரிகளை தன் வசம் எடுத்துக் கொண்டு முறைப்படுத்தினாலே, அரசு கஜானாவில் மானமுள்ள வருமானம் அதிகாளவில் வந்துசேரும். அரசு திருந்துமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆகையால் ஒவ்வொரு இளைஞனும் நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள் எனும் உறுதி மொழியை ஏற்று மதுவின் மயக்கத்திலிருந்து நாட்டை திசை திருப்ப வேண்டுமென்பதே எனது ஆசை.

எதுவும் முடியாது என்றில்லை. ஒருவர் மட்டுமே போராடினால் அது போராட்டம், பலர் கூடி போராடினால் அது புரட்சி. ஆம் இளைஞர்களே நாம் அனைவரும் ஒன்றி கூடி மதுவுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும். அதற்காக என்னோடு கை கோர்க்கச் சொல்லவில்லை. உங்கள் கைகளில் மதுவுக்கு இடம் தராமல் இருந்தாலே போதும். நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

48 comments:

  1. மில்லியன் டாலர் கேள்விகள் குடிகாரரின் மனதில் எழுந்து தானாக திருந்தினால் தான் உண்டு...

    நிகழ்வு 1 : சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடக்கிறது...

    நிகழ்வு 2 : இது புதுசாத் தான் இருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      தங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி. விரைவில் நேரில் சந்திப்போம்.

      Delete
  2. அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே.
    அரசாங்கம் நடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களைத் தனியார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
    தனியார்கள் நடத்த வேண்டிய சாராயக் கடையினை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது.
    எவ்வளவு பெரிய முரண்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தனியார் கூட சாராய வியாபாரம் செய்யக்கூடாது..
      குடி - குடும்பத்தைக் கெடுக்கும்.
      மது குடித்தவன் - மதி கெட்டவன்.
      சாராயமே - சகல தீயவைகளுக்கும் காரணம்..

      Delete
    2. கரந்தை ஜெயக்குமார் ஐயாவிற்கு
      சரியாகவே சொன்னீர்கள். அரசு வருவாய்க்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்வதோடு பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் தான் நாளைய சமுதாயம் நல்லதாக அமையும். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
    3. துரை செல்வராஜ் ஐயாவிற்கு
      அனைத்து தீய செயல்களுக்கும் அடிப்படை மது தான். இந்த குடியால் எத்தனையோ குடும்பங்கள் அழிந்தும், நடுத்தெருவிற்கும் வந்து விட்டன. இவை எல்லாம் மாற வேண்டுமானால் அரசு கடுமையான சட்டங்கள் மூலம் மதுவிலக்கு கொண்டு வந்து குடியை ஒழிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அரசு நடந்து கொள்வது ஏமாற்றமாக உள்ளது.

      Delete
  3. இன்றைய நிலையில் மிக மிக அவசியமான பகிர்வு
    விரிவான அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தங்களின் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது. கருத்துக்கும் மிக்க நன்றி. வாழ்த்தியமைக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  4. மது உணவின் அங்கமாய், கலாச்சார அங்கமாய் உலகின் பல சமூகங்களில் உள்ளது. ஆகையால் மது முற்றாக ஒழிக்கப்படல் இயலாது..ஆனாலும் மதுவை சகஜமாக வாங்கும் சூழலை ஏற்படுத்திவிட்டுள்ளதால், அனைவரும் குடிக்கும் அபாய சூழல் எழுந்துள்ளது. குறிப்பாக இளையோர், வருவாய் குறைந்தோர், ஏழைகள் அதிகளவு குடிக்கும் சூழல் வந்துள்ளது. இது தேச மக்களின் உற்பத்தி திறனையும், உடல் நலத்தையும் பாதிக்கின்றது.. இது அரசுக்கு எத்தனை கோடிகள் வருவாய் இழப்பு ஏற்படுகின்றதை உணர்வதில்லை.. அதே சமயம், டாஸ்மாக்கை மூடுவதன் ஊடாய் மீண்டும் கள்ளச்சாராயம் வரும் வாய்ப்பும் உண்டு.. ஆக கட்டுபடுத்தப்பட்ட மதுசாலைகளும், வலிமையான கட்டுப்பாட்டுகளையும் முழுமையாக செயல்படுத்தல் வேண்டும். மதுச்சாலைகள் செயல்படும் நேரங்களை குறைத்தல், நெடுஞ்சாலைகள். பள்ளிகள். பொதுவிடங்கள் அருகே மதுச்சாலைகளை அமைப்பதை தடுத்தல் போன்றவை கருத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதருக்கு நன்றி. விரிவான கருத்துக்கும் நடப்புகளை விவரித்தமைக்கும் மிக்க நன்றி. ஆனால் அரசாங்கம் நினைத்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளச்சாரயத்தையும் ஒடுக்க முடியும். அன்று கள்ளச்சாரயம் கிடைத்த பொழுது இருந்த குடிபழக்கத்தை விட டாஸ்மாக் வரவினால் தான் அதிகரித்துள்ளது என்பதே உண்மை. நன்றி சகோதரர்..

      Delete
  5. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  6. மிகவும் வேண்டிய, அருமையான விழிப்புணர்வுப் பதிவு! மதுவிலக்கு என்பது முற்றும் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! மக்கள் பலர் அதை நியாயப்படுத்தத்தான் செய்கின்றார்கள்!

    இறுதி வரி //அதற்காக என்னோடு கை கோர்க்கச் சொல்லவில்லை. உங்கள் கைகளில் மதுவுக்கு இடம் தராமல் இருந்தாலே போதும். நன்றி.//

    முத்தான வேண்டுகோள்! செவிசாஅய்ப்பார்களா?!! நம்புவோம்!

    எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம் ஐயா. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  7. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  8. நிகழ்வுகள் கற்பனை என்றாலும் கவலைகொள்ளவே செய்கின்றன சகோ!
    விழாக்களை மது இல்லாமல் கொண்டாடுவதில்லை என்ற முடிவோடு இருக்கின்றனர் பல இளைஞர்கள். உங்களை போன்றோர் இந்த யுகத்தின் அதிசயம் என்று தான் சொல்லவேண்டும், வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      என் மீதான உங்கள் நல்ல எண்ணத்திற்கும் நம்பிக்கைக்கும் முதலில் என் நன்றிகள். ஏதோ பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இப்பதிவை எழுதவில்லை. ஒவ்வொரு விழாக்கள், பண்டிகைகள், தியேட்டர்கள் என பல இடங்களில் போதையால் அடிமைப்பட்டு கிடக்கும் இளைஞர்களைப் பார்த்து மனதில் குமுறிய விடயம் இது. நாளைய உலகம் நன்றாக அமைய வேண்டுமென்பதே நமது அனைவரும் விருப்பமும். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் அக்கா.

      Delete
  9. எந்த பழக்கமானாலும் அது அளவோடு இருந்தால் தவறில்லை. மது அருந்தும் பழக்கம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களிலிருந்துதான் இன்றைய தலைமுறையினர் உலகெங்கும் சென்று சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்த பழக்கம் சற்று அதிகம்தான். குறிப்பாக பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க அரசாங்கம் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை இத்தகையோரிடம் ஏற்படுத்த வேண்டும். நல்ல பயனுள்ள பகிர்வு, ஆனால் நீங்கள் அச்சப்படுவதைப் போன்ற நிலை வருமா என்பது சந்தேகமே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      குடி அதிகமாக அதிகமாக வாழ்க்கை முறையும் ,பண்பாடும் சீரழிந்து வருவதை மறுக்க முடியாது தானே! எனது பயம் எல்லாம் இளைஞர்கள் குடியில் மூழ்கி நாட்டுக்கான தனது பங்களிப்பை வீணடித்து விடுவார்களோ என்பது தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  10. குடிக்காரனா பார்த்து திருந்தா விட்டால் குடியையும் ஒழிக்க முடியாது !
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. குடியை ஒழிக்க வேண்டுமானால் அது மக்கள் நலனின் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாங்கத்தினால் தான் முடியும் . அதுவரை இந்நிலையே நீடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்.

      Delete
  11. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  12. தானாகத்தான் திருந்த வேண்டும்....

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  13. நீக்கமற நிறைந்து கிடைக்கிறது மது! இந்த பழக்கத்தை ஊக்குவிக்கும் அரசு வேறு! செவிடன் காதில் ஊதிய சங்காய் தான் போகிறது இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுகள்! ஆனாலும் நம் கடமை! நாம் சொல்லிவைப்போம்! நல்லதொரு பகிர்வு சகோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நான் பதிவிடும் போதே நினைத்தேன் நாம் சொல்லி யார் கேட்பார்கள் என்று! இருந்தாலும் சொல்வது நமது கடமை. ஊதுற சங்கை ஊதி வைப்போம். யாரு காதுக்கு எட்டுதுனு தள்ளி நின்னு வேடிக்கைப் பார்ப்போம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்.

      Delete
  14. நான் பெரிதும் வேதனைப்படுவது ஏழைக்குடிகாரர்களின் குடும்பத்தை நினைத்துத்தான். எத்தனையோ மனைவிகள், குழந்தைகள் பணமின்றி, அன்பின்றி வேதனைப் படுகிறார்கள். எப்படியும், தெருவுக்கு 3/4 டாஸ்மாக் கடைகள் தேவையில்லை.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      வேதனையாக அழகாக சொல்லி விட்டீர்கள்.
      தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

      Delete
  15. வணக்கம் சகோ, இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,
    சகோ ரா.விவரணன் கூறியது போல் இதற்க்கென்று ஒரு நேரம் யாருக்கும்பாதிப்பு இல்லாமலாவது இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  16. வணக்கம் சகோ. மது அருந்துவது காலம் காலமாக இருக்கிறது..முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பது சந்தேகமே..மக்களாய்ப் பார்த்து உணர வேண்டும்..அதுவும் கடினமாக இருக்கிறதே..நீங்கள் சொல்வது போல் இளைஞர்கள் உணர்ந்து கொண்டால் சிறிது சிறிதாக மாறிவிடும்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரி. இளைஞர்கள் நினைத்தால் வளமான பாரதத்தை உருவாக்கலாம். அவர்களின் சக்தி வீணாவது தான் வருத்தமாக உள்ளது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  17. முற்றிலும் மேற்க்குறிப்பிட்ட நிகழ்வை ஒழிக்க இயலாது என்று கருதப்படுகிறது. குறைந்த பட்சம் குடி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அதிலிருந்து மீட்டு விட்டால் பல குடும்பங்களுக்கு ஒளியேற்றியது போன்றது

    ReplyDelete
  18. மது இல்லாத விசேசம் இல்லையென ஆகிவிட்டது,இதுபற்றியான விழிப்புணர்வு மிகவும் கம்மியாகிப்போன தேசமாய்/

    ReplyDelete
  19. தேவையானத் தகவல் .ஆண்கள் சந்ததி மூளை மழுங்கி உருவாகிக் கொண்டுள்ளது.கவனிக்க வேண்டிய விசயம்

    ReplyDelete
  20. முதல் பதிவை படித்தவுடன், உண்மையிலேயே இப்படி நடந்திருக்கான்னு பயந்து போய்விட்டேன். நீங்கள் சொல்கிற மாதிரி, இந்த மாதிரி எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சிரியமில்லை தான். அருமையாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வருத்தமான விசயம்தான்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு....
    வருத்தப்பட வேண்டிய விசயமாக இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் திருந்த வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது..

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரா ! தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் ஏற்கனவே மினக்கெட்டு நல்ல கருத்து எல்லாம் எழுதி முடிந்து வெளியிடும்நேரம் அழிந்து விட்டது. அது தான் கவலை யாகி விட்டது போய்விட்டேன்.

    நல்ல பதிவு கண்டு மகிழ்ந்தேன்.சகோதரா. உண்மையில் மதுவை ஒழிப்பதாலும் கடையை மூடுவதாலும் பயன் இருக்குமோ இல்லையோ. மது அருந்துவதை மையமாக வைத்து அதனால் ஏற்படும் துன்பங்களை தொகுத்து திரை படங்கள் எடுத்தால் நல்லது என்றே தோன்றுகிறது. குடிப்பவர்களையும் விட இளம் சமுதாயம் அதனால் பாதிக்கபடாமல் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காத படி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் நல்லம் என்று தோன்றுகிறது. இது திரைப்படங்கள் நாகரீகம் என்று போர்வையில் மதுவை ஊற்றிகொடுக்கும் படங்கள் அல்லவா காட்டப்
    படுகிறது. என்ன செய்வது ஆனை தன்கையால் மண் அள்ளிபோடுவது போல் போடுவதற்கு.
    மிக்க நன்றி பாண்டியா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கள் குடும்பத்தாரனைவருக்கும் புதுப்பெண்னுக்கும்....!

    ReplyDelete
  24. “சிறிகள் பெறினே எமக்கீயும் மன்னே,
    பெரியகள் பெறினே யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே” என்று சங்க காலத்தின் அவ்வை முதலாக இந்தக் குடி இருக்கத்தான் செய்கிறது. கேரளாவில் சாயா குடிப்பதுபோலத்தான் கள் குடிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் குடிப்பதைத் தனிப் பெருமையாகக் கருதி அலம்பல் நடக்கிறது, ஆபத்தை வரவழைத்துச் சாகிறார்கள்... ஊரில் பத்துக் குடும்பமாவது மதுவால் தாலியிழக்கும் அபாயம் தொடர்கிறது இந்த அநியாயம் வேறெந்த நாட்டிலும் இல்லை... தீர்வு நோக்கிச் சிந்திக்கத் தலைவர்கள் தயாரில்லை. தானாய்ப் பட்டு அழிந்து போய், அல்லது உணர்ந்து திருந்தினால்தான் உண்டு போலும்.கவலைப்பட வைத்த பதிவு நண்பா

    ReplyDelete
  25. சிறந்த சமூக பொறுப்புள்ள பதிவு சகோ... வாழ்த்துக்கள்
    மூளைச்சக்தி என்ற வார்த்தை பிரோயோகம் ரொம்பவே அருமை...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete