அரும்புகள் மலரட்டும்: அரசு நடத்தும் அல்ட்ரா டீலக்ஸ் (சுந்தரா டிராவல்ஸ்)

Wednesday 22 January 2014

அரசு நடத்தும் அல்ட்ரா டீலக்ஸ் (சுந்தரா டிராவல்ஸ்)


நண்பர்களுக்கு வணக்கம். படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் சொல்ல போகிற கதைக்கும் படத்திற்கு சம்மந்தம் உண்டு.

சிவகாசியில் வசிக்கும் எனது உடன்பிறவா அன்பு சகோதரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு நானும் அக்காவின் கணவர் திரு. சீனீராஜ் அவர்களும் 21.01.2014 அன்று சென்று திரும்புகையில் நடந்த ஒரு பயணத்தைப் பற்றி தான் தங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

சிதம்பரத்திலிருந்து கும்பகோணம் வந்து இருவரும் இரவு உணவை அருந்தி விட்டு தஞ்சாவூர் போக பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். கூட்டம் அதிகமில்லாத பேருந்தில் பயணம் செய்தால் தூங்குவதற்கு வசதியாக இருக்குமென எண்ணி கூட்டம் அதிகம் இருந்த மூன்று பேருந்துகளை விட்டு விட்டோம். அப்போது தான் நமது கதையின் கதாநாயகர் வந்தார். ஆம் அரசு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, பேருந்து நிலையத்தின் ஓரத்தில் வந்து நின்றது. அதை சற்று தாமதமாக கவனித்த நாங்கள் பேருந்து புறப்படும் நேரத்தில் ஓடி வந்ததைக் கவனித்து நின்று ஏற்றிக் கொண்டார்கள்.

பேருந்தில் அவசரமாக ஏறியதில் எதைப்பற்றியும் கவனிக்காமல் ஆளுக்கொரு இருக்கையைப் பிடித்துக் கொண்டோம். எங்களைப் போலவே இடைமறித்து ஏறிய பயணிகள் எங்கள் இருக்கையில் மீதமுள்ள இடங்களைப் பிடித்து நாங்கள் தூங்குவதற்காக போட்ட திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டு விடுவார்களோ என்று எண்ணி கொண்டு சென்றிருந்த பையை எடுத்து இருக்கையின் மீது எடுத்து வைத்து அந்த இருக்கையைக் காத்துக் கொண்டேன்.

எனது முன்னால் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்தார். எனக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் எவரும் உட்காரவில்லை. மொத்தமே பேருந்தில் ஒரு குட்டிப்பையன் உட்பட 13 பயணிகள் மட்டுமே. ஐயாவுக்கு (எனக்கு தான்) ஒரே சந்தோசம் நிம்மதியா தூங்கீட்டே போகலாம்னு.

எனது எண்ணத்தில் அடுத்த நொடி விழுந்ததே ஒரு அடி பேருந்து  சற்று நகர்ந்ததும் கடகடவென ஒரு சப்தம் சாலையை விட்டு நகர்ந்து கரடுமுரடான பாதையில் செல்கிறதோனு சந்தேகம். என்னடா தெரியாம ஏறிட்டோமோனு நினைத்துக்கொண்டே பயணச்சீட்டும் எடுத்தாகி விட்டது.  சத்தத்தை சமாளித்து நமது கட்டையைப் போடுவோம் (தூங்குவோம்னு) இருக்கையை வசதிக்கு ஏற்றாற்போல் சரிசெய்து சாய்ந்தேன் எனது இருக்கை எனக்கு பின்னால் இருக்கும் இருக்கையை தொட்டு நின்றது. அப்போது தான் புரிந்தது இது இருக்கை இல்லை இருக்கை மாதிரினு.

( மேலே நீங்கள் பார்த்த படம் ஏதோ விபத்து நடந்த பேருந்தின் இருக்கை இல்லை நாங்கள் பயணித்த பேருந்து இருக்கையில் ஒன்று உங்கள் பார்வைக்கு)

அதுக்கு பின்னாடி தூக்கம் வருமா! என்னத்த சொல்றது!
 எப்ப பேருந்தின் மேற்கூறை இடிந்து விழுமோனு பயந்ததை சொல்லவா! முன்னாடி இருக்கிற சீட்டு ஆளோட என்மேல விழுந்துருமோ நடுங்கியதைச் சொல்லவா!  பில்டிங் ஸ்ட்ராங் தான் பேஸ்மட்டம் தான் வீக்குனு சொல்ற மாதிரி நான் நல்ல இருக்கிற மாதிரி தெரிந்தாலும் கால்கள் தந்தி அடித்ததைச் சொல்லவா!

இருதய நோயாளி பயணித்திருந்தால் இங்கேயே முடிந்து போயிருப்பாரே என வருந்தியதைச் சொல்லவா! கட்டை வண்டி மாதிரி தூக்கி தூக்கிப் போட்டதில் எனது அலைபேசி இன்சர்ட் சிம்னு தகவல் தந்ததைச் சொல்லவா! நாங்க ஏறியதும் அணைந்த விளக்குகள் நடத்துநர் அணைக்கவில்லை அதுவா நின்றது என்பதை உணர்ந்த தருணத்தில் நான் தலையில் அடித்துக் கொண்டதைச் சொல்லவா! குலதெய்வத்துக்கிட்ட ஒன்னோட பிள்ளையைக் காப்பாத்தி எப்படியாவது தஞ்சாவூரு சேர்த்திருப்பானு வேண்டிகிட்டதைச் சொல்லவா!

இப்படி எத்தனையோ வேண்டுதல்கள் என் எண்ணத்தில் வந்து போனது இருப்பினும் நடத்துநர் 500 ரூபாய் 100 ரூபாய் என அன்றைய வசூலை எண்ணினார் பாருங்கள் பய புள்ளைங்க நம்மள மாதிரி காலையிலிருந்து நிறைய சிக்கிருக்குக போல இதுக்கு மேல பேருந்தை விட்டு இறங்குவதாக இல்லை என்ன தான் நடக்கும்னு பாத்திருவோம் ஒரு தைரியம் வந்திருச்சு.

பேருந்து ஏன் இந்த நிலைமையில் இயங்குகிறது என்று சக பயணிகளிடம் விசாரித்த போது பேருந்து புதிதாக வந்தது முதல் காயிலாங்கடை போகிற வரைக்கும் பராமரிப்பே செய்யுறது இல்லைனு சொன்னாங்க ( பராமரிக்கிறது இருக்கட்டும் காயிலங்கடைக்கு போகிற காலத்துக்கும் காலாவதி ஆகிடுச்சேனு எவனும் கவனிக்கலையே ). ஒவ்வொரு பேருந்து கிளம்பும் போதும் சரிபார்க்க வேண்டிய பராமரிப்பாளர் சம்பளம் வாங்க வருவதோடு சரி அடுத்த சம்பளத்திற்கு தான் மறுபடியும் அவரைப் பார்க்கலாம்னு அதிர்ச்சி செய்தியைக் கேட்ட போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். இந்த தகவல்கள் உண்மையாக இருப்பின் தயவுசெய்து பயணிகளின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

நண்பர்களே நம்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஆனால் அத்துணையும் உண்மை.

வண்டி எண் TN 01 N 7877 
படிக்கும் நண்பர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இனி அந்த பேருந்து இதே நிலைமையில் இயங்குவதை நிறுத்த செய்யுங்கள். ஏறும் பயணங்களின் உயிரைக் காப்பாற்றுவது இருக்கட்டும் குறைந்தது ஓட்டுநர், நடத்துநர் உயிரையாவது காப்போம்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

48 comments:

  1. நம்ம ஊரில் பெரும்பாலான வண்டிகள் இப்படித்தான் இருக்கின்றன...
    அரசு இயந்திரமே பழதாகிக் கிடக்கும் போது அரசு பேருந்தை யார் பார்க்கப் போகிறார்கள்... இதுபோல எனக்கும் எத்தனையோ அனுபவம்...

    ம்... நல்ல விதமாக வந்து சேர்ந்தது சந்தோஷம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். விரைவான கருத்துக்கும் நல்ல விதமாக வந்தமைக்காக மகிழ்ச்சியடைந்ததுக்கும். நீங்கள் மகிழ்ச்சியடைந்தது என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அன்புக்கு நன்றீங்க சகோதரர்

      Delete
  2. //எனது அலைபேசி இன்சர்ட் சிம்னு // அடக் கடவுளே.. யாராவது பார்த்து எதாவது செய்தால் நலம் :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். என்னடா நம்ம செல்போன் ரொம்ப நேரமா சிணுங்கவேயில்லையேனு நினைச்சுட்டு எடுத்து பார்க்கிறப்ப தான் அந்த கூத்து நடந்தேறியது.

      Delete
  3. அரசைப் போலத்தான் பேருந்தும் போல
    பொத்தாம் பொதுவாக இல்லாமல்
    வண்டி எண்ணுடன் பதிவிட்டிருந்தது பிடித்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றீங்க ஐயா. வண்டி எண் மட்டுமல்ல, ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் சேர்த்து எழுதுருப்பேன். பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. அவங்க உயிரையும் பணயம் வைத்து தான் வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்காங்க.

      Delete
  4. தஞ்சைக்கு வந்திருக்கிறீர்கள். தெரியாமல் போய்விட்டதே. அடுத்த முறை தஞ்சைக்கு வரும்பொழுது அலைபேசியில் அலையுங்கள்.
    தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றீங்க ஐயா. அடுத்த முறை வரும் போது அவசியம் அழைக்கிறேன் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  5. வணக்கம்
    சகோதரன்

    உண்மையின் நிலவரத்தை உண்மையாக சொல்லியுள்ளிர்கள்... ஏதோ பிரச்சினை இல்லாமல் சந்தோசமாக சேர்ந்தது.. போதும் சகோதரன்...,தரம் இல்லாத பேருந்துகளை பயணிக்க அனுமதிக்க கூடாது என்ற கருத்தை முன்வைத்து இதற்கு சரியான நடவடிக்கையாக மக்கள் போராட்டாம் (அதாவது சாலை மறியல் )இந்தியாவில் இதற்கு சொல்லதேவையிலை...
    நல்ல விழிப்புணர்வு பதிவு.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். விழிப்புணர்வு அவசியம் தேவை. கட்டணங்களை உயர்த்தி விட்டு பராமரிப்பு கூட இல்லாமல் இருப்பது மக்களின் மீதான அக்கறை இல்லாமையைத் தான் காட்டுகிறது. அவசியம் புகைப்படத்தோடு தக்க அலுவலருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்.

      Delete
  6. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றீங்க வாத்தியாரே (நண்பரே)
      மார்க் எல்லாம் போடவும் எங்க கட்சியில (ஆசிரியர் ) சேர்ந்திட்டீங்களோனு நினைச்சுட்டேன்.

      Delete
  7. சகோ தங்கள் பயத்தை பற்றிய இந்த பதிவு சிரிக்கவும் ,நம் அரசாங்க பேருந்துக்காக சிந்திக்கவும் வைக்கிறது.அருமையான பகடி .இவ்வளவு ஹுமர எழுதுவிங்கள ?!அல்லது எழுதவச்சுடாங்கள ?!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி. நமக்குள்ளயும் எம்.ஆர்.ராதா, சந்திரபோஸ் இல்லை சந்திரபாபு (மாத்திட்டாங்களாம் சிஸ்டர்) எல்லாம் ஒளிந்து கொண்டு இருக்காங்க இதுபோல அப்பப்ப எட்டி பார்ப்பாங்க. (சிரிக்கவும் சிந்திக்கவும் என்று நீங்கள் குறிப்பிட்டதால் எம்.ஆர்.ராதா, சந்திரபோஸ்னு மட்டும் சொல்லிருக்கேன் பலபல வடிவேல் எல்லாம் பத்திரமாக பதுங்கி இருக்காங்க ஏனென்றால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேன்ல அப்ப கண்டிப்பா இருக்காங்கனு தானே அர்த்தம்).
      அன்பு சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

      Delete
  8. அரசு பேருந்துகள் பல இப்படித்தான் இருக்கின்றன. தூரம் குறைவாக இருந்ததாள் தப்பித்தேறல். சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகளிலும் பல இப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தூரம் குறைவு என்பதால் தான் தைரியமா வந்தேன். இல்லையென்றால் நடத்துநரிடம் வம்பு கட்டி காசு கொடுயானு சட்டையைப் பிடிச்சுறுக்க மாட்டேன் (மாட்டேனு நானே சொல்லிட்டேனோ! மனசுல இருக்கிறது அப்படியே வெளில வந்துருது என்ன பண்றது). தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் ஐயா.

      Delete
  9. ஒரு முறை நான் இந்தியா வந்தபோது, காரைக்குடிக்கு போகலாம் என்று அன்று மாலை முடிவெடுத்து, இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து, இந்த மாதிரி அரசாங்க அல்ட்ரா டீலக்ஸ்ல ஏறினேன். ஏண்டாப்பா ஏறினோம் என்றாகிவிட்டது. புஷ் பேக் சீட்டை சாய்க்க முடியவில்லை. ஜன்னலை திறக்க முடியலை. இதெல்லாத்தையும் விட கொடுமை, முட்டைப்பூச்சியின் அட்டூழியம் தான். ஏற்கனவே யாராவது இரத்தம் கொடுத்தால் தேவலை என்று இருக்கும் என் உடம்பில், இந்த மூட்டைப்பூச்சிகள் இருந்த கொஞ்சநஞ்ச ரத்தத்தையும் உறிஞ்சிடுச்சு. அதிலேருந்து தனியார் வண்டிகள் தான்.

    நீங்க தைரியமா அந்த இருக்கைகளையெல்லாம் புகைப்படம் எடுத்துப்போட்டிருக்கீங்க. போதாக்குறைக்கு வண்டி எண்ணையும் எழுதியிருக்கீங்க.
    அந்த தைரியத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். தங்கள் அனுபத்தையும் பகிர்ந்து அழகான கருத்துரை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.

      Delete
  10. உங்களுக்குள்ளே இசை அமைப்பாளர் சந்திர போஸ் எதுக்கு வந்தார் ,சந்திரபாபு தானே வந்து இருக்கணும் ?
    த.ம 6

    ReplyDelete
    Replies
    1. நன்றி பகவான்ஜி சகோதரர்
      ஏதோ சின்னபிள்ளை சொல்லிட்டானு விடாம ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சுங்க பாத்தீங்களா அங்க தான் நிக்கிறீங்க சகோதரர். சும்மா தவறாக எண்ண வேண்டாம். தங்கள் திருத்தத்திற்கு அன்பான நன்றிகள். தொடர்வோம்.

      Delete
  11. வணக்கம் சகோதரரே! நலமாய் வந்து சேர்ந்தீர்களே, மகிழ்ச்சி!
    இந்நிலை மாறட்டும்..உங்கள் சமூக உணர்வையும் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி. தங்கள் அன்பும் அக்கறையும் என்னை நெகிழ வைக்கிறது. தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்.

      Delete
  12. ஆட்கள் குறைவாக இருக்கும் போதே "மைல்டா ஒரு டவுட்" வந்திருக்க வேண்டாமோ...?

    நேற்று நாம் பேசும் தான் இந்தப் பேருந்தில் வந்தீர்களா...!?!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். நாம் பேசிய பொழுது இல்லை இது அதற்கு முதல் நாள் 21.01.2014 அன்று. எனக்கு டவுட் வந்ததே இருந்தாலும் தூங்கிட்டு போகறதுல ஆர்வமா இருந்ததுல கவனிக்கல சகோதரர். இனிமே அந்த பேருந்துல போனதுக்கு அப்பறம் எந்த பேருந்துலயும் தயங்காம போகலாம் தைரியம் வந்துருச்சு.

      Delete
  13. இதெல்லாம் அரசு பேருந்து கழகத்துல சகஜம்ங்க. இன்னைக்கில்ல இருபத்தைந்து வருசத்துக்கு முன்பு நான் தஞ்சையிலிருந்து தூத்துக்குடிக்கு ரெகுலராக (மாசம் மூன்று முறை) செல்லும்போது இதே கதிதான். இன்னும் நூறு வருடத்திற்கும் இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பாரம்பரியமா தொடருதா! கண்டிப்பாக இது மாற வேண்டும் சகோதரர். மாற்றம் என்பது நடக்கும் என்றே நம்புவோம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.

      Delete
  14. அரசு பேருந்துகள் பலவும் இப்படித்தான் இருக்கிறது... அதில் பயணிக்கும் கர்ப்பிணி பெண்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்... வண்டி குலுங்கும் போதெல்லாம் மெல்ல வயிற்றை பிடித்து கொண்டு சங்கடப்படுவதை நிறைய பார்த்திருக்கிறேன்... வாகனம் மட்டுமா போக்கு வரத்து சாலை மட்டும் என்ன லட்சணத்தில் இருக்கிறது...

    சரி விடுங்க... பிரேக் டான்ஸ் யாரும் சொல்லித்தராமயே கத்துக்கிட்டிங்கல்ல....

    சமூக அக்கறைக்கு நன்றி சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரியின் வருகையைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் கூறுவது போல் நிறைய அவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாலை பயணங்களில் மிகவும் கவனமாக செல்ல வேண்டி உள்ளது. வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் அன்பான நன்றிகள் சகோதரி.

      Delete
  15. பெரும்பாலான அரசுப் பேருந்துகளின் நிலையே இதுதான்!
    யாரை நோவது! ஊதியத்தை பெருக்கு! உழைப்பை சுருக்கு! என்பதே
    முழக்கமாகிவி ட்டது என்றால் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      மிக சரியாகவே சொன்னீர்கள். இருந்தாலும் வருந்துவதோடு விட்டுவிடாமல் நம்மால் முடிந்த குரலையும் கொடுப்பது நலமாக இருக்கும் தானே ஐயா. நன்றி ஐயா தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும்.

      Delete
  16. நல்ல வழக்கறிஞரை அணுகவும்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம் அப்புறம் எத்தனை பேரு சாமி கிளம்பியிருக்கீங்க! என்னை மாட்டி விடுறதுல அவ்வளவு சந்தோசம். இருக்கட்டும். விளையாட்டுக்கு தான் சகோதரரே. தங்கள் வருகைக்கு அன்பான நன்றிகள்.

      Delete
  17. the truth is in house expertise of Maintenance department and body building department were scrapped as part of privatisation initiative. Structural reforming measures of one by one privatization made these kind of Organization running in mixed mode of both Govt and private players eating the profits. Hence these issues.

    ReplyDelete
    Replies
    1. Thanks for coming and your different comments. surely all r moving to private side. government should take favour action this problem. Thank you.

      Delete
  18. செயல்படாத அரசை பிரதிபலிக்கும் பேருந்து..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா. வருகைக்கு நன்றி.
      குறைந்த பட்சம் மனிதாபிமானத்தோடு ஊழியர்கள் நடந்து கொண்டாலே நலமாக இருக்கும். என்ன செய்ய!

      Delete
  19. புத்தாண்டு அன்று திருச்சி செல்ல இரவு அரசு பஸ் ஏறினால் , நடத்துனர் மதுரைக்கு டிக்கெட் வாங்கினால் மட்டுமே இடம் தருவதாக கூறினார். அவசரத்திற்கு வேறு வழி இன்றி செல்ல வேண்டியாகி விட்டது.
    அரசே இப்படி செய்தால் எப்படி...
    இந்த அரசு இப்படியுமா மக்களிடம் கொள்ளை அடிக்க வேண்டும்.
    ஏற்கனவே எல்லா விலைகளும் விண்ணை தொடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. இந்த கொடுமையை என்னானு சொல்றது! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

      Delete
  20. இப்படி உயிரை கையில பிடிச்சு ஊர் போய் சேர்ந்த அனுபவம் பல உண்டு....
    வாழ்த்துக்கள் சகோ/

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரர். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமானு இதையும் ரசித்துக் கொண்டே வாழ்க்கை பயணத்தை நகர்த்திட்டு போக வேண்டியது தான். கருத்துக்கும் வருகையும் மகிழ்வளிக்கிறது. தொடர்வோம் சகோதரர். நன்றி.

      Delete
  21. நண்பர்களுக்கு வணக்கம்.
    தங்களுக்கு நன்றி சொல்லும் நேரமிது.
    தற்போது வரை இந்த பதிவை ஒரே நாளில் 1036 பேர் படித்துள்ளார்கள். தமிழ்மணம் திரட்டியில் அதிகம் படித்த வாசகர்கள் பகுதியில் முதலிடத்தையும், தமிழ்வெளி திரட்டியில் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. தமிழ்மணத்தில் இணைத்த மூன்று மாதத்திற்குள் எனது தளத்திற்கு 24 ஆவது தரவரிசை இவை அனைத்தும் உங்களால் தான் சாத்தியாமாயிற்று. எனது தளத்தைத் தொடரும் நண்பர்கள், வாசித்து கருத்திட்ட, கருத்திட நேரம் இல்லாமல் படித்து விட்டு மட்டும் செல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  22. சகோதரர் விழிப்போடு இருக்கும் போது விழிப்புணர்வு கொண்டு வருவதுவா கஷ்டம். நமக்கென்ன என்று போகாது. தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யும் துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாதே. சபாஷ் பாண்டியா !
    அத்துடன் சும்மா இல்லாமல் நகைசுவை வேறு கலக்கிட்டீங்கப்பா.
    அந்தப்பகுதி மக்கள் தான் இவற்றை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் இல்லையா. வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரியாரே வருகை
      வழக்கம் போல் தங்கள் பாணியில் அழகான கருத்துரையால் என்னையும் அசத்தி விட்டீர்கள். நீங்கள் கூறியது போல் அங்குள்ள மக்கள் குரல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். இருப்பினும் நமது குரலும் அவர்களின் குரலோடு இணையும் போது வலு சேரும். தங்கள் அன்பான வருகைக்கும் கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  23. பேருந்தும்
    இருக்கைகளும்
    இருப்போரும் துன்புற
    ஓட்டுநர் ஓட்ட
    நடத்துனர் பணம்பறிக்க
    அரசுக்கு வருவாய்
    பாதிப்படைவது
    நம்மாளா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. வருக.
      தங்கள் கூறியுள்ளதில் மிக சரியே. பேருந்து கட்டணத்தையும் உயர்த்தி விட்டு இதே நிலை நீடிப்பது வருத்தமான விடயமே. அரசு அருள்கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும். வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  24. நல்லதொரு பதிவு! நம்ம பஸ்ஸுங்க எல்லாமே இப்படித்தனே சரியான கவனிப்பு இல்லாமல்! மக்கள் பஸ்ஸில் உயிரைக் கஒயில் பிடித்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டும்! அதுதான் இன்றைய நிலைமை! தாங்கள் தைரியமாக படம் எடுத்து, வண்டி எண்ணையும் போட்டீர்கள் பாருங்கள் அதற்கு ஒரு ஷொட்டு, பாராட்டு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete