அரும்புகள் மலரட்டும்: அரசியல் அரிதாரம்

Saturday 28 September 2013

அரசியல் அரிதாரம்

                                                                             நண்பர்களிடம் நாம் பேசி மகிழும் நேரங்களில் நம்மை தகுதிக்கு மீறி புகழும் போதோ, இயல்புக்கு மாறாக கருத்துத் தெரிவிக்கும் போது சும்மா அரசியல் பண்ணாதேடா னு நாம செல்லமாகக் கடிந்து கொள்வது உண்டு. அப்போது அச்சொல்லின் ஆழம் நமக்கு தெரிவதில்லை இன்று நடக்கும் அரசியல் கேளி கூத்துக்களைக் காணும் போது நாம் கூறியது எவ்வளவு பொருத்தம்னு உணர வைக்கிறது.  இன்றைய அரசியலில் மத்தியில் ஆளும் காங்கிரசின் செயல்பாடு ரொம்ப வேதனை ஊட்டக்கூடியதாகவும், கேளிக்கூத்தாகவும் இருப்பதைக் காண முடிகிறது.                                                                                                
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து குற்ற பின்னணி உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை பாதுகாக்கும் வகையில் கொண்டுவர உள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனும் செய்தி பற்றி ஒரு பிரிவினர் ராகுல்காந்தியின் தொலை நோக்கு எண்ணம் வெளிப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அப்பழுக்கற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். வெளிப்படையான, நேர்மையான, ஊழலற்ற ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதை தன்னுடைய கருத்தின் மூலம் அவர் நிலைநாட்டியுள்ளார். குற்றபின்னணி உள்ளவர்களுக்கு பதவி வேண்டாம். அவர்களால் நேர்மையாக நடக்க முடியாது. எனவே ராகுல்காந்தியின் கருத்தினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்..                                                                                                                  மற்றொரு பிரிவினர்  டுவிட்டர் மற்றும் இதர இணைய தளங்களில் வந்த கருத்துகளை மனதில் கொண்டு இந்த அவசர சட்டத்தை பயன்படுத்தி ராகுலை ஒரு நல்ல கதாபாத்திரமாக்கும் காங்கிரசின் செயல்பாடு என்பது மக்களுக்கு தெரியும்... இந்த அவசர சட்டத்துக்கு பாதிக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து அனைவருக்கும் வருத்தம் தான்.... இப்படியும் யோசிக்கலாம்... ராகுலை தவிர்த்து அவர் அறியாமல் திருமதி. சோனியாகாந்தி மற்றும் திரு. மன்மோகன் சிங் இந்த அவசர சட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார்களா? அப்போ இது பற்றி தெரியாத ராகுல் எப்படி ஒரு தேசிய கட்சியின் துணை தலைவராக இருக்க முடியும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்....                                                                                             நமது பார்வையில் கூட நிறைய கேள்விகளை இச்சம்பவம் எழுப்புகிறது என்பது உண்மை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் நபருக்கு தனது கட்சி அமைச்சரவை விவாதித்து எடுக்கப் போகும் முடிவு முன்கூட்டியே தெரியாதா! மூன்று மாதமாக நடக்கும் இந்த அவசரச் சட்டத்திற்கானச் செயல்பாடுகளை உண்மையில் அறியவில்லையா! தனது கட்சியின் செயல்பாட்டிற்கு திட்டமிட்டு பத்திரிக்கைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் உள்நோக்கம் என்ன?                                                     கட்சியின் தலைவர் தனது அன்னை, அவர் தேசிய வளர்ச்சிக் குழு தலைவரும் கூட அவரிடம் தெரிவித்துக் கூட இச்சட்டத்திற்கு தமது அமைச்சர்கள் ஒப்புதல் அளிப்பதை முன்கூட்டியே நிறுத்தியிருக்க முடியும். திரு. ராகுல் அவர்களின் கண்டனம் வரவேற்கத் தக்கது என்று எடுத்துக் கொண்டாலும் முட்டாள் தனமானது, கிழித்துக் குப்பையில் போட வேண்டும் என்று இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளராக தம்மை முன்னிருத்திப் பேசும் இவ்வேளையில் இது போன்ற வார்த்தைகள் தேர்தலுக்கான நாடகமா என்று கூட யோசிக்க வைக்கிறது.                               நாடே அறிந்த அவசர சட்டம் விவகாரத்தில் திடீரென்று விழித்துக் கொண்டது போல் இன்று தான் எனக்கு இந்த விடயம் தெரியும் அதனால் கொதித்து எழுகிறேன் என்பது போல் செயல்பட்ட விதம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கான செயலாகவே தோன்றுகிறது.                                         எண்ணற்ற இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த திரு. ராகுலும் சாதாரண அரசியல்வாதியைப் போல் அரசியல் நாடகத்தின் அரிதாரம் பூசிக் கொண்டாரோ என்று எண்ணும் போது தான் வேதனையளிக்கிறது. எப்படியிருப்பினும் சாமானிய இந்திய குடிமக்களின் எண்ணத்தில் எழும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காத அரசியல்வாதிகளுக்கு  தேர்தலில் பதிலளிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள் என்பதை அரசியல்வாதிகள் மறந்து விட வேண்டாம்.                                                                                       (படம்: நன்றி பேஸ்புக் நண்பர்கள்)                            

11 comments:

  1. 1975-77களில் ராகுலின் பாட்டி ஆடிய அவசர (நிலைக்கால) ஆட்டம் இந்தியாவை நிலைகுலையச் செய்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவரது அம்மாவின் ஒரு தாலிக்கு எத்தனை லட்சம் தாலி? எனும் அப்பாவித் தமிழனின் கேள்விக்கான பதிலை யார் சொல்லப் போகிறார்கள்? இன்னும் நம்பிக்கையூட்டும்படியாக ஏதாவது செய்யட்டும்... என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்து. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்குதான், பில்டிங்கு -பிட்டிங்க்ஸூ?
    தங்கள் படைப்பு நன்றாகவே இருக்கிறது... எனினும் எடுத்த எடுப்பில் நேரடி அரசியலைத் தவிர்க்கலாம் என்பதையும் யோசியுங்கள்... ஆனால் தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. அரசியல் பதிவைத் தவிர்க்கவே யோசித்தேன் இருப்பினும் இச்சம்பவம் குறித்த ஏதோ ஒரு தாக்கத்தினால் எழுதி விட்டேன். அரசியல் சார்ந்த பதிவைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமும் அல்ல, எனினும் இனிவரும் காலங்களில் சுத்தமாகத் தவிர்த்து விடுகிறேன். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள். தங்களின் ஆலோசனை எப்பவும் என்னை வழி நடத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். தொடர்ந்து தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கிடுங்கள். நன்றீங்க அய்யா.

      Delete
  2. வணக்கம் பாண்டியன்!.... அடடா... இது உங்கள் வலைத்தளமான்னு வியக்கின்றேன்...
    பாடுபட்டு பதியம்போட்டு நீரூற்றி வளர்த்துவிட வான்முட்ட வளர்ந்து வா வா எனப் பூச்சொரிந்து எமை அழைக்கிறதே உங்கள் வலைப்பூ...:)

    அருமை! அழகு!.. வலைப்பூ வடிவமைப்பிற்குப் பாராட்டுக்கள்!

    இங்கு உங்கள் பதிவிதற்கு என்ன கருத்திடுவது நான்? ...ம். . அத்தனை ஞானம் அரசியலில் எனக்கு...:))
    தவிர.. நடப்பதைக் காண்பதுமட்டுமே அரசியல் என்பங்கு. எங்கும் சாரமாட்டேன்...சரி பிழை புரிந்தாலும் தெரிந்தாலும் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஞாயம் இருக்கும்.. பொதுவில் வேண்டாம் வில்லங்கம் என்று போவதுண்டு...

    உங்களின் வேறு ஆக்கங்களுக்கு நிச்சயம் என் கருத்தும் இங்கு இடம்பெறும்..
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி வாங்க! //அருமை! அழகு!.. வலைப்பூ வடிவமைப்பிற்குப் பாராட்டுக்கள்!// தங்களின் பாராட்டுக்கும் கவனித்து கருத்தளித்தமைக்கும் நன்றிகள். தொடர்ந்து வேறொரு பதிவில் சந்திப்போம். நன்றி சகோதரி.

      Delete
  3. நண்பர் Jack sparrow அவர்கள் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். தங்கள் கருத்தை ஒரு சில காரணங்களால் நீக்கி விட்டேன். தவறாக எண்ண வேண்டாம். திரு. ராகுல்காந்தி அவர்களிம் செயல்பாடு ஏதோ ஒரு விதத்தில் என்னை உந்த என் எண்ணத்தில் தோன்றியதைப் பதிந்தேன். எந்த அரசியல் சார்ந்து நான் இல்லை என்பதை நண்பர்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. ராகுலின் கண்டனம் விளம்பரமாகவே படுகிறது. பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. யார் மூலமோ மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்பதே நமது விருப்பம் பார்க்கலாம் அய்யா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி அய்யா.

      Delete

  5. ///அரசியல் பதிவைத் தவிர்க்கவே யோசித்தேன் இருப்பினும் இச்சம்பவம் குறித்த ஏதோ ஒரு தாக்கத்தினால் எழுதி விட்டேன். அரசியல் சார்ந்த பதிவைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது விருப்பமும் அல்ல, எனினும் இனிவரும் காலங்களில் சுத்தமாகத் தவிர்த்து விடுகிறேன்///

    இது தவறான முடிவு......அரசியல் நம் வாழ்க்கையில் பின்னி பிணந்து இருக்கிறது அதை பற்றி நம் மனதில் எழும் கருத்துக்களை இப்படி பதிவுகளாக வெளியிட வேண்டும் கருத்து சொல்லவே தயங்குபவர்கள் தங்கள் உரிமைகளை அரசியல் தலைவர்களிடம் அடகு வைத்து அடிமை பெற்ற நபராகவே இருப்பார்கள் ஏதோ சொல்லனுமுணு தோணிச்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி. வலைப்பக்கத்திற்கு புதியவன் தங்களைப் போன்றோரின் கருத்துக்களும், ஆலோசனைகளும் என்னையும் வலைத் தளத்தையும் செழுமைப்படுத்தும். தொடர்ந்து இணைந்திருப்போம். வருகைக்கு நன்றீங்க அய்யா.

      Delete
  6. எல்லாமே அரசியலாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா வருக வருக! தங்களது வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு அன்பான நன்றீங்க அய்யா.

      Delete